கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக தடுப்பூசி போடுவது நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக, மூன்றாவது நாளாக இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை

Update: 2021-06-08 12:04 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த, 5, ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக, 2 லட்சத்து, 35 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுகொண்டனர்.

ஆனால் மருந்துகள் காலியான நிலையில், கடந்த, 3 நாட்களாக மாவட்டம் முழுவதும், தடுப்பூசி போடும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம், 25 முதல், 18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போடப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்றும், டோக்கன்கள் வாங்கி வைத்தும் ஊசி போட்டு வந்தனர்.

ஒரேநாளில் அதிகபட்சமாக, 9ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போட்டு வந்த நிலையில், கடந்த, 3 நாட்களாக மாவட்டத்தில் எங்கும் தடுப்பூசிகள் போடாததால், பொதுமக்கள் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று, தடுப்பூசிகள் இல்லை என்ற அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாளொன்றுக்கு, 4 முதல், 5 பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழந்து வரும் நிலையில், தடுப்பூசிகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் கவலையும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தடுப்பூசிகள் விரைவில் வரவிருப்பதால், ஓரிரு நாளில் மீண்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News