கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

Update: 2021-08-29 13:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள   கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சாய் சரண் தேஜஸ்வி கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்றார். அதன் பிறகு மாவட்டத்தில் லாட்டரி விற்பனை, குட்கா விற்பனை போன்றவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். மேலும் குற்ற வழக்குகளிள் தொடர்புடையவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தார். இந்தநிலையில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியல்களை எடுத்து விசாரிக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, போச்சம்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொலை செய்து மும்பையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அதே போல கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பர்கூர் அருகே சிறுவனை கொலை செய்து வீசிய குற்றவாளிகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களும் ஓரிரு நாட்களில் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்து, கண்டுபிடிக்கப்படாமல் போன கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கிடப்பில் உள்ள அனைத்து கொலை, கொள்ளை வழக்குகளும் தற்போது தூசி தட்டி விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News