மக்களை தேடி மருத்துவம் ஆகஸ்டில் துவக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்

Update: 2021-07-26 10:00 GMT

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலினால் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்களில் அமைச்சர்கள் சுப்ரமணியன், காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, பர்கூர், ஜெகதேவி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு இலவசமாக போடப்படும் நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி திட்டத்தை துவங்கி வைத்தனர். பின்னர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயந்திர பானு ரெட்டி எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

கிருஷ்ணகிரியை பொருத்தவரை, 62 ஆரம்பசுகாதார நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 13 உள்ளன. அவற்றில் தமிழகத்திலேயே முன்மாதிரியாக 10 மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார மையங்களில் தலா, 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆரம்பசுகாதார நிலையங்களில், 30 ஆக்சிஜன் படுக்கைகள், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், பேறுகால உதவிதிட்டம், குழந்தைகளுக்கு போடப்படும் நியூமோகோக்கல் தடுப்பூசி திட்டம், ஆக்சிஜன் தானியங்கி உற்பத்தி, உள்ளிட்டவற்றை துவங்கியுள்ளோம்.

மூன்றாவது அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் விருப்பம். இருப்பினும், அதிகமாக பாதிக்கப்படலாம் என கூறப்படும் குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.மேலும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அல்லது தர்மபுரி மாவட்டத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வரால் துவங்கப்படும். இதன் மூலம் சர்க்கரை, இரத்தகொதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய் பாதிப்புள்ளவர்கள் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கப்படும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள்.

மலைகிராம மக்களின் தேவைகளை அறிந்து கொள்வதில் சிரமம் என்பதால் தான் நாங்களே நேரடியாக சென்று அவர்களின் மருத்துவ தேவைகளை கேட்க உள்ளோம். கொரோனா தடுப்பூசி போடும் பணியை முந்தைய அ.தி.மு.க. அரசு வேகப்படுத்தவில்லை. ஆனால் தற்போதைய அரசு நாளொன்றுக்கு, 1லட்சத்து 61 ஆயிரம் பேர் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கடந்த, 10 வருடங்களில் ஒப்பந்த அடிப்படையில், 30 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இனிவரும் காலங்களில் கலெக்டர், மருத்துவக்கல்லூரி முதல்வர் மூலம் நேரடி நியமனம் செய்யப்படுவர்.

மேலும் தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களில், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News