கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல்

தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1800-425-5456 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம்.

Update: 2022-01-27 13:45 GMT

ஆட்சியர் பிரபுசங்கர்.

கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதை முன்னிட்டு நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் துவங்க உள்ளது என மாவட்ட தேர்தல் அலுலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (28.01.2022) துவங்க உள்ளது. கரூர் மாவட்டத்தைப்பொறுத்தவரை கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி மற்றும் புகளுர் ஆகிய 3 நகராட்சிகள், புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மருதூர், நங்கவரம் , தோட்டக்குறிச்சி , பழையஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் கரூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகம், நகராட்சி ஆணையர்கள் அலுவலகம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் பட்சத்தில் அவர்களுடைய முன்மொழிபவர் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். ஐனவரி 31 வரை அரசியல் கட்சிகளின் பேரணியோ,கூட்டங்களோ நடத்த அனுமதி இல்லை. வீடு , வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேட்பாளருடன் அதிகபட்சமாக மூன்றுநபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அரசியல் கட்சிகளின் உள் கூட்டரங்கு கூட்டங்களை கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்ற பிறகே நடத்த வேண்டும்.

தெருமுனைகளிலோ, சாலைப்பகுதிகளிலோ, ரவுண்டானாக்கள் அருகிலோ அரசியல் கட்சிகளின் கூட்டங்களை நடத்த அனுமதி இல்லை. இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை. அரசியல் கட்சியினர் நேரில் சென்று வாக்கு சேகரிப்பதை தவிர்த்து ஊடகங்கள் வாயிலாக பரப்புரை மற்றும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டால் கொரோனா தொற்றுப் பரவாமல் கட்டுப்படுத்தலாம். 04.2.2022 அன்று வேட்புமனுத்தாக்கல் நிறைவுபெறும். வேட்புமனுக்கள் பரிசீலனை 05.02.2022 அன்று நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 07.02.2022 ஆகும். 19.02.2022 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். 22.02.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் முழு விபரம் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் மற்றும் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1800-425-5456 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News