உணவு பாதுகாப்பு விதிமீறல்: கரூரில் 18 கடைகளுக்கு அபராதம்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 18 கடைகளில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இணைந்து கரூர் நகரம் வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு விடுதிகள், டீ கடை, பேக்கரி, பெட்டி கடை என 60 கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இதில் 6 டீ கடைகளில் கலப்பட டீத்தூள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல 12 கடைகளில் செய்தித்தாள்களில் வடை, போண்டா ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கியது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தலா 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, காலாவதியான எடை கருவிகளை வைத்திருந்த குற்றத்திற்காக 4 கடைகள் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்தனர். தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தவறுகள் கண்டறியப்பட்டால் முதல் முறை அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தனர்.