குமரி ஆறுகளில் 2வது நாளாக வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், ஆறுகளில் 2 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர் மழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி, விடிய விடிய பெய்த கனமழை, இன்றும் நீடித்து வருகின்றது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் தொடரும் இந்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள பாலாறு, வீராணமங்களம் ஆறு, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலையில், அங்கிருந்து வெளியேறும் நீரால் நெல், வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதமாகலாம் என அஞ்சப்படுகிறது.