காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்ட தானியங்கி மஞ்சள் பை இயந்திரத்தில் திருட்டு

காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்ட தானியங்கி மஞ்சள் பை இயந்திரத்தை சேதப்படுத்தி பைகள் திருடப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.

Update: 2023-05-25 16:01 GMT

தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் பயன்பாட்டினை ஏகாம்பரநாதர் கோயிலில் துவக்கி வைக்கப்பட்டது (பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்டம் நிர்வாகம் இணைந்து தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டினை முற்றிலும் அகற்றிடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

மேலும் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணிகள் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து உறுதிமொழி ஏற்றல் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகள் உணவுகங்கள் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொள்ளுதல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் கோயில் நகரம் அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேச திருக்கோயில்களும், பரிகார தளங்களும் அமைந்துள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை புரிகின்றனர். அவர்களும் பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை நிறுவுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பிளாஸ்டிக் பயன்படுத்துதலை தவிர்க்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த 12ம் தேதி முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ரூபாய் பத்து நாணயம் மற்றும் நோட்டுகளை செலுத்தி பயன்பாட்டினை துவக்கி வைத்தனர்.

துவக்கி வைக்க சில நாட்களிலே இந்த இயந்திரம் திடீர் திடீர் என பழுதடைந்து பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்து வந்ததை தொடர்ந்து அதில் பராமரிப்பு பணியை எடுத்துள்ள எஸ் கே ஐ என்டர்பிரைசஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட பக்தர்களுக்கு ஊழியர் அளித்த பதில் அதிர்ச்சியை அளித்தது.

அந்நிறுவ ஊழியர் கூறுகையில் , சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் நிலையில் பணம் செலுத்திய நிலையில் பை கிடைக்காது தான் அந்த இயந்திரத்தின் பக்கவாட்டை தட்டும் நிலையில் அதில் உள்ள எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட் பழுதடைந்து விடுகிறது.

மேலும் சில முறைகேடாக இயந்திரத்தில் இருந்து பைகளை களவாடி செல்வதும் தெரிய வருகிறது. இயந்திரத்தை தட்டும் நிலையில் அது பயனற்ற நிலைக்கு செல்வதும் , அதற்காக திருக்கோயில் ஊழியர் யாராவது நியமிக்கப்பட வேண்டும் எனவும் ,  இதனை எப்படி கையாள்வது என குழப்பமாக உள்ளதாகவும் இதுவரையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இயந்திரத்தில் இருந்து மஞ்சப்பை திருடுவதாக கூறிய செய்தி பக்தர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.இதனை செய்யும் நபர்களை கண்டுபிடிக்க அருகில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News