விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன் என மிரட்டியதாக மருமகள் மீது மூதாட்டி புகார்

விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன் என மிரட்டியதாக மருமகள் மீது மூதாட்டி காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Update: 2022-12-04 09:45 GMT

மருமகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த மூதாட்டி.

காஞ்சிபுரத்தில் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன், தண்டவாளத்தில் தள்ளி விடுவேன் என்று மிரட்டி தன்னை அடிப்பதாக கூறி மருமகள் மீது 86 வயது மூதாட்டி தாலுகா காவல் துறையிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென் மாவட்ட பகுதியான கோவில்பட்டியை பகுதியை சேர்ந்தவர் வீரம்மாள். இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இவர்களுக்கு  திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தன் கணவர் இறப்புக்கு பின் வீரம்மாள் சென்னை, அண்ணா நகர் மேற்கில் வசிக்கும் தனது பெரிய மகள் வேலுமணி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் தனது பெரிய மகன் பிரித்திவிராஜ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அழைத்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பிரித்திவிராஜ் சென்னைக்கு அழைத்து சென்று அவரது அக்காள் வீட்டில் வெளியே தனியாக அமர வைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் காஞ்சிபுரம் திரும்பி உள்ளார்.

இதனைக் கண்ட அவரது மகள் அவரிடம் நடந்தவற்றை கேட்டு அவருக்கு மருத்துவ உதவி செய்துள்ளார். இந்நிலையில் மூத்த மருமகள் மாரியம்மாள் வயது மூத்தோர் என்றும் பாராமல் வீரம்மாளை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் அவர் மீது வீரம்மாள் புகார் தெரிவிக்க இன்று காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு வந்ததால் தனது மகள் வேலுமணி மற்றும் பேரனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரம்மாள் அளித்த புகார் மனுவில் ,கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தனது மகன் வீட்டிற்கு வந்ததாகவும் வந்த நாள் முதல் அவரது மனைவி மாரியம்மாள் சரிவர வீரம்மாளுக்கு உணவுகள் அளிப்பதில்லை எனவும் , இரவு நேரங்களில் பல தடவை வீட்டுக்கு வெளியே அனுப்பி கதவை தாளிட்டுக் கொண்டு சித்திரவதை செய்வதாகவும் பல தடவை அடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாரியம்மாள் அரசு சுகாதார நிலையத்தில் பணிபுரிவதால் வீரம்மாளை ஊசி போட்டு கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும், அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசினால் கூட கேட்க நாதியில்லை என கூறி கடும் வார்த்தைகளால் மிரட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை துன்புறுத்திய மருமகள் மீது தகுந்த நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் எனவும் இம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புகார் அளிக்க வந்த மூதாட்டியிடம் புகாரினை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் விசாரித்தனர். மேலும் புகார் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என மூதாட்டிக்கு தெரிவித்து அனுப்பினர்.

புகார் அளித்த பின்பு அவரது மகள் வீட்டிற்கு பாதுகாப்பு கருதி செல்வதாக காவல்துறையிடம் கூறிவிட்டு விசாரணைக்கு அழைக்கும் போது வருவதாகவும் தெரிவித்தார்.

புகார் அளித்தது குறித்து மூதாட்டி மாரியம்மாளிடம் கேட்டபோது , காவல்துறை  தன்னிடம் அன்பாக குறைகளை கேட்டிருந்ததாகவும் தான் கூறியது அனைத்தும் உண்மை என அவர்களிடம் தெளிவாக தெரிவித்ததும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் கூறினார்.

Tags:    

Similar News