நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு, இன்று முதல் துவங்கியது.

Update: 2021-11-26 05:15 GMT

விருப்ப மனு அளித்த அதிமுகவினர் 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் , 774 கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்ற பிரதிநிதிகள் தற்போது மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும்  மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் அரசியல் கட்சியினர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வை துவக்கியுள்ளனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில்,  இன்றுமுதல் விருப்பமனு பெறும் நிகழ்வு, தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் துவங்கியது. இதில்,  தேர்தலில் போட்டியிட விரும்பிய நிர்வாகிகள் விருப்பமனுவை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர். விருப்ப மனுக்களை வரும் திங்கட்கிழமை வரை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டது

இந்த நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் பழனி, வி.பாலாஜி, கேயூஎஸ் சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News