காஞ்சிபுரத்தில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு..
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள துறை செயலர் பதவிகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு திடீரென சென்று சோதனை நடத்துவதும் உண்டு.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலராக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சுப்பிரமணியன் காஞ்சிபுரத்தில் பல்வேறு திட்ட செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, வரதராஜ பெருமாள் கோயில் வடக்கு மாடவீதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அதே பள்ளியில் என்னும் எழுத்தும் எனும் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மாணவர்களிடம் சோதித்தும், அவர்களின் கற்றல் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் நிலை குறித்தும் பல்வேறு துறைகளில் செய்யப்பட்டு வரும் மக்கள் பணிகள் குறித்து வட்டாட்சியருடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் தரம் சுவை குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மலையாங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.