காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் தெப்போற்சவ விழா

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில், மாகரல் பாலசுப்பிரமணியர் கோயில், திம்மராஜாம்பேட்டை இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றில் தெப்பல் விழா நடைபெற்றது.

Update: 2023-02-06 12:00 GMT

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் நடைபெற்ற தை மாத பௌர்ணமி தெப்ப உற்சவத்தில் தெப்பத்தில் எழுந்தருளிய ஸ்ரீ தேவராஜ சுவாமி மற்றும்  பெருந்தேவி தாயார்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் பௌர்ணமியை ஒட்டி 3 நாட்கள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தை மாதம் பௌர்ணமியை ஒட்டி வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி, மற்றும் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பச்சை பட்டு உடுத்தி, திருவாபரங்கள் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு அனந்த சரஸ் திருக்குளத்தை சுற்றி வந்தார்.


பின்னர் ஆதிசேசனின் அவதாரமான ஆனந்த சரஸ்வதி திருக்குளத்தில் வாழைமரம், மாவிலை தோரணங்கள், கட்டி பூமாலைகள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருந்தேவி தாயார் உடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முதல் நாளான இன்று மூன்று முறை வலம் வந்தார்.

தை மாத பௌர்ணமியை ஓட்டி நடைபெற்ற பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவத்தில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.


இதேபோல்  வாலாஜாபாத் அடுத்த திம்மராஜாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வட ராமேஸ்வரம் என அழைக்கப்படும் இராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூச விழாவை ஒட்டி செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் தாங்கிப் பகுதியில் அமைந்துள்ள திருக்குளத்திற்கு மேளதாளம் முழங்க வீதி உலா வந்து திருக்குளத்தில் எழுந்தருள தெப்பல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இத்திரு குளத்தை ஒன்பது முறை வலம் வந்து பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு ராமலிங்கேஸ்வரர் அருள் பாலித்தார்.

இதே போல் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் -  சாலையில் உப்புகுளம் பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருநாளை ஒட்டி முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்கள் பழங்கள் சந்தனம் விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தள்ளினார்.

திருக்கோயில் அருகே உள்ள திருக்குளத்தில் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் எழுந்தருள மேல தாளங்கள்,  அரோகரா அரோகரா என பக்தர்கள் முழங்க எழுந்தருளினார்.

சிறப்பு தீபாராதனைக்கு பிறகு திருக்குளத்தை ஒன்பது முறை பாலசுப்பிரமணியர் வலம் வர சுற்றுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை வணங்கி கற்பூரம் ஏற்றி தீபா ஆராதனை செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்ற சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர்.

இதேபோல் பல்வேறு முருகர் திருத்தலங்களில் தைப்பூச விழாவை ஒட்டி தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

Tags:    

Similar News