காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம் திறக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-15 02:42 GMT

இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சியை பார்வையிடும் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் அர.சக்கரபாணி.

.காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வேளாண் வணிக தொழில் கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் கே.எழிலன் தலைமை வகித்தார்.

விழாவில் இயற்கை விவசாய பொருட்காட்சியை தொடக்கி வைத்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதிமுக ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திலும், செங்கல்பட்டிலும் மொத்தமாக 60 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே இருந்தன.

இப்போது காஞ்சிபுரத்தில் 58,செங்கல்பட்டில் 92 உட்பட மொத்தம் 150 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன.

கடந்த ஆண்டு 1.87லட்சம் மெட்ரிக்.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.இந்த ஆண்டு 2.20லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெற்களஞ்சியம் எனக் கூறப்படும் தஞ்சாவூரை விட கூடுதலாக நெல் காஞ்சிபுரத்தில் தான் உற்பத்தியாகிறது.

வேளாண்மைக்கு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் தனியாக பட்ஜெட் போட்டிருக்கிறது.தமிழகத்தில் விளையும் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு உள்ளது.அதைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையம் தொடங்கப்படவுள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் திறக்கப்படும் என்றார்.

விழாவிற்கு வணிகர்கள் சங்க பாதுகாப்பு பேரவையின் மாநிலத் தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன், எம்.பி.க.செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ,வேலூர் பல்கலை துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன், விவசாயிகள் கூட்டியக்க மாநில செயலாளர்கள் பி.கே.சண்முகசுந்தரம்,கே.வாசு சீனிவாசன்,எஸ்.தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில தலைவர் பி.கே.தெய்வசிகாமணி வரவேற்றார். தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் அமைச்சர்சக்கரபாணி வேளாண் வணிக தொழில் கூட்டமைப்பை தொடக்கி வைத்து பேசினார்.

Tags:    

Similar News