முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..! காற்றில் பறந்ததா ஆட்சியர் உத்தரவு?

காஞ்சிபுரத்தில், முதல்வர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற தி.மு.க தொண்டர்கள் முகக்கவசம் அணியாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் உத்தரவு காற்றில் பறந்ததா? என கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-06-28 14:45 GMT

காஞ்சிபுரத்தில், முதல்வர் வரவேற்பு நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டிய தி.மு.க உடன்பிறப்புகள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூர்,  திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இன்று மாலையில்  சென்னையிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வழியாக காரில் வேலூர் சென்றார். அப்போது, முதல்வர் மற்றும் தொண்டர்கள் முகக்கவசம் குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் விதித்த உத்தரவை பின்பற்றாமல் அலட்சியம் காட்டியது முகச்சுளிப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒருமாத காலமாக உருமாறிய கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு இதுகுறித்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை மூலம் அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியபோது, பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள் என எடுத்துரைத்தார். இந்நிலையில் இன்று மாலை பொன்னேரிக்கரை  பகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க வந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 95 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாமல் முதல்வரிடம் முண்டியடித்து சென்று வாழ்த்து பெற்றனர். அரசின் அறிவிப்பை தனது முதல் கடமையாக நினைத்து பின்பற்ற வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களே, முதல்வர் முன்னிலையில் அலட்சியம் காட்டியது, பொதுமக்களிடம் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை, இனி வரும் நிகழ்விலாவது, உடன்பிறப்புகள் கடைப்பிடிக்குமாறு கண்டிப்புக்கும் உறுதிக்கும் கட்டுக்கோப்புக்கும்  பெயர்பெற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு..!

Tags:    

Similar News