கடை ஞாயிறு விழாவில் நேர்த்திக்கடன் செலுத்த அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் கட்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை தங்கள் தலை சம்பந்தபட்ட நோய் தீர்க்கக்கோரி மண்டை விளக்கு பூஜை செய்வது வழக்கம்.

Update: 2022-12-04 05:45 GMT

காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாவது வார கடை ஞாயிறு விழாவை ஒட்டி அதிக அளவில் நேர்த்திக்கடன் செய்ய குவிந்த பக்தர்கள்.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்திபெற்ற திருக்கோயில்கள் நோய் தீர்க்கும் திருத்தலங்களாக விளங்கி வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் தங்களது தலை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீர மாவினால் அகல் விளக்கு தயார் செய்து அதில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்..

கடந்த இரண்டுஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து செயல்படுத்தியது.

கடந்தாண்டு ஆண்டு பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும்  ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 7 மணி முதலே சிறப்பு பூஜைகளுடன் கடை ஞாயிறு விழா துவங்கும். ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து அரிசி மாவினால் விளக்குகள் தயார் செய்து விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே அர்ச்சனைகள் மேற்கொண்டு அதன் பின் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி நோய் தீர்க்க வேண்டுதலுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை வழிபாடு மேற்கொள்வர்.

இந்நிலையில் தற்போது கோயில் திருப்பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் கடை ஞாயிறு விழாக்கள் நடைபெறுமா என சந்தேகம் அடைந்த நிலையில் இந்தாண்டு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வழக்கம்போல் கடை ஞாயிறு விழா நடைபெறும் என கோயில் செயல் அலுவலர் ப.பூவழகி தெரிவித்துள்ளார்.

அதன்படி நவம்பர் மாதம் 20 மற்றும் 27 தேதிகளிலும், டிசம்பர் மாதம் 4 , 11 மற்றும் 15 தேதிகளில் கடை ஞாயிறு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கடை ஞாயிறு விழாக்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்த காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வருவதால் அதனை சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் அனைவரும் பயனடைவர் .

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படும் ஐயப்ப பக்தர்களும் அதிக அளவில் இக்கோவிலில் வந்து கடை ஞாயிறு விழாவில் தரிசனம் செய்வர்.

கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் சற்று குறைந்த நிலையில் இன்று மூன்றாவது கடை ஞாயிறு விழா திருக்கோயிலில் நடைபெறுவதால் அதிகாலை ஆறு மணி முதலே அதிக அளவில் பக்தர்கள் குவிந்து தங்கள் குடும்பத்துடன் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டு மாவினால் செய்த விளக்கை மண்பானையில் வைத்து தலையில் சுமந்தவாரே திருக்கோயிலை சிறியவர் முதல் பெரியவர் வரை வளம் வந்தனர்.

வலம் நிறைவு பெற்றவுடன் மூலவரை தரிசிக்க பொது மற்றும் சிறப்பு அனுமதி வழித்தடங்களில் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

கடந்த இரு ஞாயிற்றுக்கிழமை காட்டிலும் இன்று அதிக அளவு மக்கள் குவிந்துள்ளதால் காவல்துறை, ஊர்க்காவல் படையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பும் வழிகாட்டுதலும் செய்து  வருகின்றனர்.

சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர்.

Tags:    

Similar News