பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தொ.மு.ச சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்பாட்டம்
கொரோனா பேரிடர் காலத்திலும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் பாஜக அரசை கண்டித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா பேரிடர் காலத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தும் பாஜக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தரவரதன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய செயலாளர் சுந்தரவரதன் , கடந்த 7 ஆண்டுகளில் 404 சதவீதம் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இதனால் பெருதொற்று காலத்திலும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக நிலை தற்போது உருவாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகளை பாதியாக குறைப்போம் என கூறி தற்போது நாள்தோறும் விலையை உயர்த்தி வருகிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.