விடைபெற போகிறது நூற்றாண்டு கண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டிடம்

நூற்றாண்டு கண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் விரைவில் கட்டப்பட இருக்கிறது.

Update: 2023-05-22 14:23 GMT

காஞ்சிபுரத்தில் புதிய மாநகராட்சி கட்டிடம் கட்டப்பட இருப்பதால் பழைய கட்டிடம் முன் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இன்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கோயில் நகரம், பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் 1866ல் நகராட்சி துவங்கப்பட்டது.

1947ல் Grade -1னாக உயர்வு பெற்று 1983ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2008ல் சிறப்பு தேர்வு நிலை , பெருநகராட்சி என பல பரிணாம வளர்ச்சிக்கு பின் கடந்த வருடம் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் மாநகராட்சி என சிறப்பை அறிவிப்பாக பெற்றது.

கடந்த 2011ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,32,216 நபர்கள் உள்ளனர்.மொத்தம் 51 வார்டுகளை நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு நாள்தோறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகம் 1921 ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

அப்போது கீழ் தளத்தில் ஆணையர் அலுவலகம் மேயர் அலுவலகம் மற்றும் பல்துறை அலுவலக கட்டிடங்கள் கீழ்வளாகத்திலும் முதல் மாடியில் மாமன்ற கூட்டம் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டு தற்போது வரை மாமன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தொழிற்சாலைகள் மாவட்டம் என்று உள்ளதாலும், கல்விக்கான கல்லூரிகள் அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக காஞ்சிபுரம் புறநகர் பகுதியில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் வருகை மற்றும் பொதுமக்களின் அன்றாட வருகைக்கு அதிக அளவில் வருவதாலும் வாகனங்கள் அதிக அளவில் சாலையில் நிற்பதால் போக்குவரத்திற்கு இடையூறு என்பதும் தற்போதைய அதிநவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு சாதனங்கள் பொருத்த பழைய கட்டிடம் என்பதால் சற்று சிரமம் ஏற்படுவதால் புதிய மாநகராட்சி கட்டிடம் கட்ட மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் இதனை ஒப்புதல் அளித்து பணிகளை துவங்க உள்ளதால் இந்த கட்டிடத்தில் கடைசி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.

பழைய கட்டிடம் நினைவாக   மேயர் மகாலட்சுமி யுவராஜ் , மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இணைந்து கட்டிட வளாகம் முன்பு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இன்னும் சில வாரங்களில் மாநகராட்சி அலுவலகம் ஹாஸ்பிடல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான யாத்திரி நிவாஸ் கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கும் என தெரிய வருகிறது.

நூற்றாண்டுகளை கடந்தும் தற்போதும் காஞ்சியின் கம்பீரமாக நிற்கும் இந்த கட்டிடம்,  புதிய கட்டிடமாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிளிர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News