களியனூர் கிராம ஊராட்சியில் நாட்டு நலப் பணி திட்டங்களில் 90 கல்லூரி மாணவிகள்

காஞ்சிபுரம் அடுத்த களியனூர் கிராம ஊராட்சியில் ஏழு நாட்கள் நாட்டு நல பணி திட்டங்களில் 90 மாணவிகள் ஈடுபடவுள்ளனர்.

Update: 2022-03-05 08:15 GMT

நாட்டு நல பணிக்கு வந்த கல்லூரி மாணவிகளுக்கு பெண் சட்ட பாதுகாப்பு குறித்து விளக்கிய வழக்கறிஞர்.

சென்னை தி நகரில் அமைந்துள்ள எஸ். எஸ்.எஸ். ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் 90 பேர் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அடுத்த பகுதியில் களியனூர் கிராம ஊராட்சிக்கு அக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாகராணி தலைமையில் வந்துள்ளனர்.

கடந்த 3ம் தேதி பணிகள் குறித்த ஆலோசனை மேற்கொண்ட பின்,  முத்தியால்பேட்டை கிராமத்தில் வீடுகள் கணக்கெடுப்பு , ஆண், பெண் கணக்கீடு, தொழில் புரிவோர் , கிராம மக்களின் கல்விதகுதி மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் விவரங்களை சேகரித்து கிராம ஊராட்சிகள் ஒப்படைத்தனர்.

இரண்டாம் நாளான இன்று களியனூர் நடுநிலைப் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சட்டப் பாதுகாப்பு குறித்து நோட்டரி வழக்கறிஞர் அசோக் பெண் பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமை சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இதேபோல் பேரிடர் மேலாண்மை சமயங்களில் நடந்து கொள்ளும் முறைகள் குறித்து முன்னாள் சாரணர் இயக்க அலுவலர் விவரித்தார்.

நாளை மருத்துவ முகாம்களும், அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயம்,  மனித உரிமைகள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் இக்குழுவினர் தெரிவித்தனர்.

ஏழு நாட்கள் இந்த நாட்டு நலப் பணித் திட்டங்களின் கீழ் இக்கிராமத்தில் பல்வேறு பணிகள் செயல்படுத்த உள்ளதாகவும் குறிப்பாக வீடுகள் தோறும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்லூரி சார்பில் மஞ்சப்பை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்விழாவில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் , பள்ளி தலைமையாசிரியர் மோகனகாந்தி,  மாணவிகள் ஒருங்கிணைப்பாளர்கள் பிரதீபா, காயத்ரி, வர்ஷா மற்றும் கிருபா தர்ஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News