தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விரைவில் அரிசி அரவை ஆலைகள்: அமைச்சர் சக்கரபாணி
அரிசி அரவை ஆலைகளை விரைவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் அவற்றை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வேளாண் வணிக தொழில் கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கூட்டமைப்பை தொடக்கி வைத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி,
தமிழகத்தில் திருவாரூர் 2, தஞ்சாவூர் 2 இவை தவிர நாகப்பட்டிணம், கடலூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று உட்பட மொத்தம் 10 இடங்களில் தினசரி 500 மெட்ரிக்.டன் அளவில் அரிசி அரவை ஆலைகள் அமைக்கப்படவுள்ளது.
இவை தவிர இரு இடங்களில் தினசரி 800 மெட்ரிக் டன் அளவிலும்,தேனி மாவட்டத்தில் 200 மெட்ரிக் டன் அளவிலும் அரிசி அரவை ஆலைகள் அமைப்பது உட்பட மொத்தம் 13 இடங்களில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவை செயல்பாட்டுக்கு வரும் போது தினசரி 6800 மெட்ரிக் டன் அளவில் அரிசி அரவை ஆலைகள் மூலம் அரைக்கப்படும்.
ஆண்டு தோறும் மேட்டூர் அணை ஜூன்.12 ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு மே.24 ஆம் தேதியே பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி நெல் கொள்முதல் ஆண்டு தோறும் அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து தான் கொள்முதல் செய்யப்படும்.ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு முன்கூட்டியே கடிதம் எழுதி செப்.1 ஆம் தேதியிலிருந்து கொள்முதல் செய்ய அனுமதி வாங்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் இந்திய உணவுக் கழகத்தின் மூலம் தானியங்கி இயந்திரம் மூலம் விரைவில் நெல் கொள்முதல் செய்யப்படும்.தேவைப்படும் இடங்கள் அனைத்திலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 45 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.இந்த ஆண்டு இதுவரை மட்டுமே 42லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்
விழாவில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ உட்பட தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் சங்கம் மற்றும் வணிகர் சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.