அம்மாபேட்டை அருகே கேசரிமங்கலத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கேசரிமங்கலத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (பிப்.4) நடைபெற்றது.;

Update: 2025-02-04 09:45 GMT

காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

அம்மாபேட்டை அருகே உள்ள கேசரிமங்கலத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (பிப்.4) நடைபெற்றது.

‌‌ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கேசரிமங்கலம் ஊராட்சியில் குப்பிச்சிபாளையம் மற்றும் கேசரிமங்கலம் பகுதிகளில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.


இந்த  முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், எலிகாய்ச்சல் மற்றும் உண்ணிகாய்ச்சல் பரவும் முறைகள் அதற்கான பாதுகாப்பு தடுப்பு வழிமுறைகள், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜய சேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதேஷ் குமார், ஸ்ரீநாத், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 150 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Similar News