வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள்: வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தொடக்கம்

நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு 237 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.;

Update: 2025-02-04 10:30 GMT

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் விவரம்

ஆண் வாக்காளர்கள் - 1,10,128

பெண் வாக்காளர்கள் - 1,17,381

3-ம் பாலினத்தவர் வாக்காளர்கள் - 37

மொத்த வாக்காளர்கள் - 2,27,576

வாக்குச்சாவடி மையங்கள் - 237

வேட்பாளர்கள் - 46

தபால் வாக்கு

85 வயதுக்கு மேற்பட்ட 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 47 பேரும் என மொத்தம் 256 வாக்காளர்கள் தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பம் கொடுத்திருந்தனர். இதில் 246 பேர் தபால் வாக்குகள் செலுத்தியுள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு கட்டுப்பாடு கருவிகள், ஒரு வி.வி.பேட் என 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரச்சார இறுதி

நேற்று மாலையுடன் இறுதி கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது. இதனையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வெளியூரைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேறினர்.

போலீஸ் சோதனை

நேற்று இரவில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபம், சமுதாயக்கூடத்தில் யாராவது வெளிநபர்கள் தங்கி உள்ளார்களா? என போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.

வாக்குச்சாவடி மையங்கள்

நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு 237 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை, குடிநீர் வசதி, சாமியான பந்தல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மண்டல அலுவலர்கள்

8 முதல் 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் வீதம் மொத்தம் 24 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


வாகன விநியோகம்

ஈரோடு சி.என்.சி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இன்று காலை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் அந்தந்த மண்டல அலுவலர்கள் அவர்களுக்கு கீழ் பணி செய்யும் அலுவலர்கள், அவர்கள் பயன்படுத்தப்படும் வாகனங்கள், ஒவ்வொரு லாரியிலும் ஒரு துப்பாக்கி ஏந்திய போலீசார், டிரைவர், சாதாரண போலீசார், ஒரு அலுவலர் ஆகியோர் வாகனங்களிலிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

வாக்குப்பதிவு பொருட்கள் வழங்கல்

மாநகராட்சி அலுவலகத்தில் பழைய கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு வாகனங்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 97 வகையான பொருட்களுக்கும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

அதைத்தொடர்ந்து வேனில் வந்த போலீசார் வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட போலீசார் துணை ராணுவத்தினர் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களில் தங்களது பாதுகாப்பு பணியை தொடங்கினர். வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இன்று இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

அதில் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறித்த ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது.அவர்கள் வாக்குச்சாவடி மையங்களிலேயே தங்கி இருந்து தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.

தேர்தல் நடைமுறை

நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பின்னர் காலை 7 மணி முதல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணி உடன் தேர்தல் நிறைவடைந்ததும் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொரியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முடிவு அறிவிப்பு

வரும் 8-ந் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News