நடிகர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி வேண்டுகோள்

மக்கள் பிரச்சினைக்காக நடிகர் விஜய் போராட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2023-06-18 09:21 GMT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா.

நடிகர் விஜய் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மக்கள் பிரச்சினைக்காக போராட முன்வரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஏற்கனவே அரசியலுக்கு வருவதைப் அவ்வப்போது பிரதிபலித்து கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து பாராட்டி பரிசு வழங்கி இருக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள நீட் கையேடுகளை இலவசமாக 2000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கினோம்.

எனவே நல்ல விஷயங்களை ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைக்காக விஜய் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராட முன் வர வேண்டும்.தமிழக மக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இன்று ஆளுகின்ற மக்கள் விரோத தி.மு.க. அரசால் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. கல்வி கடன் ரத்து, பொருளாதாரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாய கடன் ரத்து, விலைவாசி உயர்வு, கல்வி கட்டணம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என்று அன்றாட ஏராளமான பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

ஆளும் கட்சி மக்களைப் பற்றி கவலைப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை கையில் எடுத்து தொடர்ச்சியாக அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மூலமாக தீர்வு காண குரல் கொடுத்து வருகின்றோம். இந்தச் சூழலில் அரசியலுக்கு வர தயாராகும் நடிகர் விஜய் தமிழக மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடுவதற்கு முன் வர வேண்டும். மேலும் தேர்தலில் வாக்காளர்கள் யாரும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். எனவே இதை தடுக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நடிகர் விஜய்  போராட முன் வர வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News