ஈரோடு செல்போன் கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் கைது

ஈரோட்டில் செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 35 செல்போன்களை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-08 11:21 GMT

கைது செய்யப்பட்ட கொள்ளையன் விஜயகுமார்.

ஈரோட்டில் செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 35 செல்போன் களை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு-மேட்டூர் சாலையில் ஈரோட்டை சேர்ந்த பூபதி, கோவையை சேர்ந்த தரணிதரன் ஆகிய இருவரும் இணைந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.இவரது கடையில் ஈரோட்டை சேர்ந்த கவுதம் மற்றும் கார்த்தி ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு வியாபாரம் முடிந்து வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், நேற்று காலை கடையின் ஷட்டர் திறக்கப்பட்டு முன்புறம் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட கட்டிட உரிமையாளர் செல்போன் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டு இருந்தது. இது பற்றி தெரிய வந்ததும் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், புகாரின்பேரில் செல்போன் கொள்ளையனை பிடிக்க டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான தனிப்படையினர். சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும், கொள்ளையன் கடையில் இருந்த 35 ஸ்மார்ட் போன்களை  திருடி சாக்கு பையில் போடும்போது, அதனுடன் கடையில் சிம் கார்டு போட்டு பயன்பாட்டில் இருந்த செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்யாமல் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிம் கார்டு எண்ணை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன்  டிராக் செய்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அடுத்த பதுங்கி இருந்த கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்து, ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர், கன்னியாகுமரி மாவட்டம் தோப்பூர் சந்தாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 42) என்பதும், ஈரோட்டில் சாலையோரங்களில் தங்கி பழைய பேப்பர், அட்டை, இரும்பு பொருட்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வருவதும், மேட்டூர் சாலையில் குப்பை பொறுக்குவது போல் கடையை நோட்டமிட்டு, செல்போன் கடையில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த செல்போனை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரிடம்  34 புதிய ஸ்மார்ட் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விஜயகுமாரிடம் நடத்திய தீவிர விசாரணையில், இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கவரிங் கடையில் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்து, களவு போன பொருட்களை மீட்ட போலீசாருக்கு உயர்அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News