மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும் என கூறி முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-06 06:47 GMT

முதல்வர் ஸ்டாலின்.

கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியில் உள்ள நண்பரின் நெருங்கிய உறவினர் திருமணத்திற்காக திருச்சி அருகே சிறுகனூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில்  படிக்கும் 12 மருத்துவ மாணவ மாணவிகள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். நேற்று திருமணம் முடித்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அவர்கள் சென்று வந்துள்ளனர்.

இன்று காலை ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரைக்குச் சென்ற மாணவர்கள், கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, வந்த ராட்சத அலை அவர்களை இழுத்துச் சென்றது. இதில், 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், 3 பேர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கடலில் மிதந்த மூன்று பேரின் உடல்களை மீனவர்கள் தங்கள் படகில் சென்று மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம், காயத்திரி, சாரு கவி, வெங்கடேஷ் மற்றும் தர்சித் ஆகிய 5 பேரின் உடலும் தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று ஐந்து மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் கிராமம், லெமூர் கடற்கரையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது, கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியைச் சேர்ந்த செல்வி.காயத்திரி (வயது) 25 த/பெ.பாபு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன். சர்வதர்ஷித் (வயது 23) த/பெ.பசுபதி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன். பிரவின்சாம் (வயது 23), த/பெ. முருகேசன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.சாருகவி (வயது 23) த/பெ.துரைசெல்வன் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த செல்வன். வெங்கடேஷ் (வயது 24) ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்/

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News