பிளஸ் 2 ல் தேர்ச்சி பெற்ற திருநங்கை நிவேதா: டாக்டருக்கு படிக்க விருப்பம்

பிளஸ் 2 ல் தேர்ச்சி பெற்ற திருநங்கை நிவேதா: டாக்டருக்கு படிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-06 07:10 GMT

திருநங்கை நிவேதா.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய ஒரே திருநங்கையான நிவேதா வெற்றி பெற்று இருக்கிறார். நீட் தேர்வை எழுதி இருக்கும் நிலையில் மருத்துவராவது தனது கனவு என்கிறார் அவர்..

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர். 4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர். ஒரு மூன்றாம் மாநில பாலினத்தவர் தேர்வு எழுதி, அவர் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் லேடி வெலிங்டன் அரசு மாதிரி பள்ளியில் படித்த நிவேதா தான் அவர். இவர் பல்வேறு சிக்கல்கள் தடைகளை தாண்டி பிளஸ் 2 தேர்வு எழுதி 280 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பேசிய திருநங்கை நிவேதா பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்தே தான் தேர்வு எழுதியதாகவும், இரு திருநங்கைகள் தனக்கு கல்வி அதிகாரிகளிடம் பேசி, தலைமையாசிரியர் சீட்டு வழங்கியதாகவும், 3 ஆண்டுகளாக தான் இந்த பள்ளியில் படிப்பதாக கூறினார். நேற்று நடந்த நீட் தேர்வை எழுதியுள்ள நிலையில், தான் வெற்றி பெற்று மருத்துவராக பணியாற்றி சேவை செய்ய வேண்டும் என்றார்.

மேலும் தான் பள்ளியில் படித்தபோது சக மாணவிகள் தன்னை திருநங்கை போலவே நினைக்காமல் தங்களில் ஒருவராக நினைத்ததாகவும் எங்கு போனாலும் தன்னையும் அழைத்துச் சென்றதாகவும் கூறினார் மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் தனக்கு உதவியதன் பேரிலேயே தான் வெற்றி பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News