கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் மலர் பல்லக்கில் பவனி

குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்துக் காளியம்மன், பிரமாண்ட மலர் பல்லக்கில் பவனி வந்தார்.

Update: 2023-01-16 06:29 GMT

பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் மலர் பல்லக்கில் வந்த காட்சி.

குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்துக் காளியம்மன், பிரமாண்ட மலர் பல்லக்கில், நேற்று அதிகாலை கோபியில் பவனி வந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா, கடந்த, 12ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஈரோடு மாவட்டம் மட்டும இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி பங்கேற்று தீக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

இதையடுத்து மலர்ப்பல்லக்கு ஊர்வலம், கோலாகலமாக நேற்று அதிகாலை நடந்தது. சம்பங்கி, மஞ்சள் மற்றும் வெள்ளை செவ்வந்தி, ரோஜா, வெள்ளை சாந்தினி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்களால், பிரமாண்ட மலர்ப்பல்லக்கு தயார் செய்யப்பட்டது. பூக்கள் மீது சீரியல் பல்பு மற்றும் ஒளிரும் விளக்குகளால் அலங்காரம் செய்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் பாரியூர் கொண்டத்து காளியம்மன்.

மலர்கள் மற்றும் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், அம்மன் கோவிலில் இருந்து,  அதிகாலை, 1:30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டார். பாரியூரில் துவங்கி பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு, முருகன்புதுார், மேட்டுவலவு வழியாக, கோபி நகரை மலர் பல்லக்கு அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து, பல்லக்கில் பவனி வந்த அம்மனை தரிசித்தனர். பிறகு சரவணா தியேட்டர் சாலை, பெருமாள் கோவில், வீதி, ராஜவீதி, கடை வீதி வழியாக, கோபி பெருமாள் கோவிலை அடைந்தது. அம்மன் மலர் பல்லக்கு ஊர்வலத்தால், கோபி நேற்று டவுன் பகுதி விழாக்கோலம் பூண்டது.

Tags:    

Similar News