ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-04-01 12:45 GMT

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 31.03.2023 முடிய 27.34 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 89.65 அடியாகவும், 21.36 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் முடிய 98172 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்களும், 36635 எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 31.70 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 2.4 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 11 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 4.5 மெட்ரிக டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 3726 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 2722 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 870 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 8823 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.


2022-23-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது தேர்வு செய்யப்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டுவந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வேளாண்மைத்துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு 2 எண்கள் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டும், 7 எண்கள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


மேலும், மேற்கண்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பண்ணைகருவிகள் தொகுப்பு மற்றும் இதர இடுபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 32 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான இதர இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பொன்மணி, துணை ஆட்சியர் (பயிற்சி) காயத்ரி, வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குநர், மரகதமணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), மகாதேவன், முதுநிலை செயலாளர் ஈரோடு விற்பனைக்குழு (வேளாண் வணிகம்) சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், ஈரோடு, செயற்பொறியாளர், நீர்வள ஆதாரதுறை, ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் வருவாய்துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News