பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.65 அடி

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு, 913 கன‌ அடியாக குறைந்துள்ளது.

Update: 2022-10-02 06:15 GMT

பவானிசாகர் அணை.

நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும், தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்ததாக 2வது பெரிய அணையாகவும் விளங்குகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, ஆகஸ்ட் 5ம் தேதி நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து சீராக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் கடந்த 57 நாட்களாக தொடர்ந்து, 102 அடியாகவே நீடித்தது.

இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும், அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து 913 கன அடியாக சரிந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 102 அடியிலிருந்து 101.65 அடியாக குறைந்தது. இதையடுத்து, அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 500 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Similar News