ஈரோட்டில் முன்களப் பணியாளர்கள் 3500 பேருக்கு கௌரவிப்பு நிகழ்ச்சி

ஈரோடு கொல்லம்பாளையத்தில் ஆற்றல் அறக்கட்டளை பிறர் நலம் விரும்புவோர் சந்திப்பு நிகழ்ச்சியில், 3,500 பேருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Update: 2023-04-24 09:42 GMT

முன்களப் பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் ஆற்றல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆற்றல் அசோக்குமார்.

ஈரோடு கொல்லம்பாளையத்தில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் பிறர் நலன் விரும்புவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆற்றல் அசோக்குமார் தலைமை தாங்கி, ஈரோடு நகரில் தூய்மை பணியாளர்கள் சலவை தொழிலாளர்கள் ஓட்டுநர்கள் மயான ஊழியர்கள் என 3,500 பேருக்கு புத்தாடைகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் நாட்டில் மக்களை காப்பாற்றும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. ஊருக்குள் மக்களை காப்பதற்கு உங்களைப் போன்ற முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் உங்கள் ஒவ்வொருவரின் பணி பாராட்ட தகுந்தது. உங்களை கௌரவிக்க வேண்டி இங்கு ஒன்று கூடி உள்ளோம் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். உங்களுடைய குழந்தைகளுக்கு முழுமையான கல்வி செல்வத்தை நீங்கள் தடையின்றி வழங்க முன்வர வேண்டும்.

அதேபோன்று குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து இந்த சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் மதிப்பு மிக்கவர்கள் மரியாதைக்குரியவர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் மக்களுக்காக செய்யும் உங்கள பணி பாராட்டுக்குரியது. உங்களை ஆற்றல் அறக்கட்டளை வாழ்த்தி பாராட்டுவதோடு உங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க தயாராக உள்ளது. அவற்றை நீங்கள் பயன்படுத்தி சிறப்பாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் பல்வேறு சமுதாய அமைப்பின் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு சேவையாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 15 அமைப்புகளுக்கு ஆற்றல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags:    

Similar News