கலெக்டர்களுக்கு அமலாக்க துறை அனுப்பிய சம்மனுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

மணல் குவாரிகள் பிரச்சினை தொடர்பாக கலெக்டர்களுக்கு அமலாக்க துறை அனுப்பிய சம்மனுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Update: 2023-11-28 13:32 GMT

சென்னை ஐகோர்ட் (கோப்பு படம்).

மணல் குவாரி பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய  சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், இதற்கு முறையாக கணக்கு காட்டாமல் முறைகேடு நடந்ததாகவும், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும் புகார்கள் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து மணல் குவாரிகளில் கடந்த மாதம் அமலாக்க துறை அதிகாரிகள் துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். மேலும் மணல்  குவாரி ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடுகள், தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்தது. ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் முன்னிலையில் ட்ரோன் கேமரா மூலமும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தமிழக நீர்வளத்துறை தலைமை பொறியாளரை நேரில் அழைத்து அமலாக்க துறை விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றது. இதன் பின்னர் சென்னை ஐகோர்ட்டில் மணல் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில் மேலும் கூடுதல் தகவல் பெறுவதற்காக வேலூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, கரூர் உள்பட 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியது.

இப்படி சம்மன் அனுப்புவதற்கு அமலாக்க துறைக்கு அதிகாரம் இல்லை என கூறி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணல் குவாரி முறைகேட்டில் சுமார் 4 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்து உள்ளது என வாதிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இது சட்ட விரோதமான சம்மன், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது அரசியல் ரீதியானநடவடிக்கை என வாதம் செய்தனர்.

இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அப்போது சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் அமலாக்கத் துறை ஆட்சேப மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வாரம் அவகாசம் அளித்து உள்ளனர்.சம்மன்களுக்கு மட்டுமே தடை, விசாரணைக்கு தடையில்லை என்றும் அந்த உத்தரவில் கூறி இருந்தனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற டிசம்பர் 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News