கொடுமுடியில் முடிவுற்ற 2 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்த அமைச்சர்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் முடிவுற்ற 2 புதிய திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.;

Update: 2025-05-09 10:10 GMT

கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1,229 நியாய விலைக்கடைகள் உள்ளது. 899 முழுநேர நியாய விலைக்கடைகள் மற்றும் 330 பகுதி நேர நியாய விலைக்கடைகள் மூலம் 7.64 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், கொடுமுடி வட்டம், கந்தசாமிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட், நடத்தும் முழு நேர நியாய விலைக்கடையான கந்தசாமிபாளையம் நியாய விலைக்கடை 834 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது.

இக்கடையிலிருந்து சுமார் 204 குடும்ப அட்டைகளை பிரித்து களிப்பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடை செயல்பட்டு வந்தது. தற்போது இக்கடைக்கு ஊர் பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கொடுமுடி வட்டம் களிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (மே.9) நடைபெற்றது.

இதில், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி நியாய விலைக் கடையினை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இக்கடையானது பிரதிவாரம் புதன் மற்றும் சனிக்கிழமை செயல்பட உள்ளது.

தொடர்ந்து, இச்சிப்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, கொடுமுடி வட்டாட்சியர் முருகாயி, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News