கோவையில் மகளை கொலை செய்து தாய் தற்கொலை

ஜோசியம் பார்த்த போது தனக்கு கை கால் சரியில்லாமல் போய்விடும் என கூறியுள்ளார்.

Update: 2022-01-06 15:45 GMT

தனலட்சுமி.

கோவை மாவட்டம் துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி(58). இவருக்கு சுகன்யா (30)என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணும், சசிக்குமார் என்ற மகனும் உள்ளனர். சசிக்குமார் திருமணமாகி சரவணம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனலட்சுமி சசிக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜோசியம் பார்த்த போது தனக்கு கை கால் சரியில்லாமல் போய்விடும் என கூறியுள்ளார். மேலும் மனமுடைந்து பேசிய தனலட்சுமி நானும் சுகன்யாவும் இருப்பது உனக்கு பிரச்சனை ஏற்படுத்தும் என்றும் எனக்கும் ஜோசியத்தில் சொன்னது போல் நடந்து விட்டால் எங்களை பார்த்து கொள்ள யாரும் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். சசிக்குமார் அவ்வாறெல்லாம் ஒன்றும் ஆகாது என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சசிக்குமார் அம்மாவை பார்க்க செல்லலாம் என எண்ணி வீட்டிற்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது அவரது அம்மா செல்போனை எடுக்காததால் அவரது பக்கத்து வீட்டுகாரருக்கு போன் செய்து வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா என பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் சென்று பார்த்த போது தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக சசிக்குமாருக்கு இந்த தகவலை கூறியுள்ளார். சசிக்குமார் வந்து பார்க்கையில் தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையிலும் சுகன்யா வாயில் நுரை தள்ளியபடியும் இருந்துள்ளார். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சுகன்யா விஷம் அருந்தி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டதில் தனலட்சுமி சுகன்யாவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News