கோவை அருகே தடுப்பணை நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழப்பு

கோவை அருகே நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர்.

Update: 2024-04-24 07:39 GMT

உயிரிழந்த மாணவர்களில் இருவர்.

கோவை மாவட்டம் காருண்யா நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில்பதி கிராமம் உள்ளது. இப்பகுதியில் முண்டாந்துறை ஆறு தடுப்பணை அமைந்துள்ளது. 40 அடி ஆழம் உள்ள தடுப்பணையில் தற்போது 15 அடி நீர் உள்ளது. கோடை விடுமுறை காரணமாக பள்ளி மாணவர்களும், கோடை வெயில் காரணமாக இளைஞர்களும் இந்த தடுப்பணைக்கு குளிக்க வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் முண்டாந்துறை தடுப்பணையில் குளிப்பதற்காக பச்சாபாளையம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த தீத்திபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிரவீன், கவின், தக்க்ஷன் மற்றும் சஞ்சய் ஆகிய 4 பேரும் சென்று குளித்து உள்ளனர்.

மாணவர்கள் 4 பேரும் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த போது, இதில் நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர். இது குறித்து காருண்யா நகர் காவல் துறை மற்றும் தீயணைப்பு, மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து காருண்யா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் பயிலும் மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News