/* */

கத்தியால் குத்திக்கொல்ல முயற்சி - ஒருவர் கைது

தென்காசி அருகே, குடும்பப் பிரச்சனை தொடர்பாக ஒருவரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கத்தியால் குத்திக்கொல்ல முயற்சி - ஒருவர் கைது
X

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களக்கோடி தெருவில் வசித்து வருபவர் சாகுல் ஹமீது(60). இவர், பழ வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அதிக கடன் வாங்கி, அவற்றை சரிவர கட்டமுடியாமல் இருந்துள்ளார்.

இதனால், சாகுல் ஹமீது மற்றும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதற்கு காரணம், மருமகனான முகமது உசேன் என்பவர்தான் என நினைத்து, அவரிடம் சாகுல் ஹமீது அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த முகம்மது உசேனிடம் சென்ற சாகுல் ஹமீது, பிரச்சனை செய்துள்ளார். அசிங்கமாக திட்டியதோடு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த முகமது உசேன், உடனடியாக மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தென்காசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சாகுல் ஹமீது மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Updated On: 28 April 2021 8:07 AM GMT

Related News