கோடநாடு சம்பவம் ஹாலிவுட் படங்களை மிஞ்சிவிடும்: கார்த்தி சிதம்பரம் பேச்சு
கோடநாட்டில் பணிபுரிந்தவர்கள் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது போல் ஆங்கிலப் படங்களில் கூட நடக்காது என்று கார்த்தி சிதம்பரம் பேச்சு.
HIGHLIGHTS
ஜெயலலிதா மறைவிற்கு பின் கோடநாட்டில் பணிபுரிந்தவர்கள் ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆங்கிலப் படங்களில் கூட கோடநாடு சம்பவம் போல் நடக்காது என்று கீழப்பூங்குடியில் கார்த்தி சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கீழப்பூங்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள் அந்த தோட்டத்தை எப்படி வாங்கினார்கள் என்பதே பெரிய மர்மம்.
மேலும் கோடநாட்டில் கொலை, கொள்ளை நடந்தது உண்மை. அது முழுமையான விசாரணையின் மூலமே தெரியவரும் அதனை விசாரிக்க கூடாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
கேரளாவில் கொரானா தொற்றுப் பரவல் என்பது அதிகமான பரிசோதனை செய்வதால் கூட இருக்கலாம். படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்பதால் அதனை அவர்கள் சமாளித்து விடுவார்கள் என்றவர், எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்தக் கணக்கும் இல்லாத உத்தரபிரதேசத்தில் கொரானா தொற்று இல்லை என்பதும், கேரளாவில் தொற்று அதிகம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
கடந்த காலம் போல் இனி ஒரு முழு ஊரடங்கை சமுதாயமும், பொருளாதாரமும் தாங்குமா என்பது கேள்விக்குறி என்றும், அதனால் தமிழகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.