பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட ஆட்சிய ர் ப.ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருவாய்த்துறை அமைச்சர் 31.08.2021 அன்று சட்டப்பேரவையில் "விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துதல், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இவ்வரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022 பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்" என்ற அறிவிப்பிற்கிணங்க சிறப்பு முகாம்கள் நடத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 10.11.2021 அன்று தொடங்கி 31.12.2021 அன்று வரை ஒவ்வொரு வட்டத்திலும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும். மேற்படி சிறப்பு முகாமில் நில அளவை (புல) எண்கள். உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார். காப்பாளர் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், உறவு நிலை குறித்த திருத்தம், மேற்குறிப்பிட்ட சில கலங்கள் பதிவுகளின்றி (வெற்றாக) இருக்கும் இனங்கள், ஒரு பட்டாதாரரின் பரப்பு, பெயர் பக்கத்து நிலத்தின் பட்டாதாரரின் விவரங்களுடன் (ஒன்றின் இடத்தில் மற்றொன்று மாறியிருக்கும் இனங்கள்) குறித்த மனுக்களை மற்றும் இதர கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
மேற்படி சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் 15.01.2022 - க்குள் தீர்வு செய்யப்படும். மேற்படி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.