காஞ்சியில் நீர் நிலைகளில் கட்டப்பட்ட 82 வீடுகளை அகற்றும் பணி துவக்கம்
காஞ்சி புரத்தில் நீர் நிலைகளில் கட்டப்பட்ட 82 வீடுகளை அகற்றும் பணி துவங்கியது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே அப்பொழுது கட்ட துவங்கிய மேம்பாலம் பொன்னேரி ஏரியின் மேலே கட்டப்படுவதாகவும் மேலும் பொன்னேரிகரையின் கரையோரம் 82 குடும்பங்கள் நீர்நிலை பகுதியில் வசித்து வருவதாகவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தார்.வழக்கு தீர்ப்பு வருவதற்குள் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது .ஆனால் இந்த பகுதியில் உள்ள 82 குடும்பங்கள் அகற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறையினர் கடந்த ஒரு வாரமாக இப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அளித்து குடியிருப்பு வாசிகளை காலி செய்ய வேண்டும் எனவும் இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் பகுதியில் இடம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
வழக்கம்போல் குடியிருப்பு வாசிகள் காலம் காலமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என இடத்தை காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில் இன்று வருவாய்த் துறையினர் காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் இப்பகுதி மக்களை உள்ள வீடுகள் உள்ள பொருட்களை மாற்று இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
மேலும் இதற்கு முன்பாக மின்சார வாரியத்தினர் இந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இப்பகுதியில் அனைத்து பொருட்களும் காலி செய்யப்பட்டு பின்னர் வீடுகள் இடிக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.
பெண்கள் கதறி அழுத போது இதை பார்க்க அவருடைய குழந்தைகளும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது. இதில் ஒரு சிறுவன் தனது அக்கா அழுவதை பார்த்து ஆறுதல் கூறிய காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது. கால அவகாசம் தந்தும் , மாற்று இடம் வழங்குவதாக கூறியும், இதனை ஏற்காததால் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.