ஈரோட்டில் ஜமாபந்தி நிறைவு
![ஈரோட்டில் ஜமாபந்தி நிறைவு ஈரோட்டில் ஜமாபந்தி நிறைவு](https://www.nativenews.in/h-upload/2023/05/29/1722455-picsart23-05-2918-34-04-749.webp)
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா
ஈரோடு மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் கடந்த 25-ம் தேதி தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, இன்று (29-ம் தேதி) திங்கட்கிழமை ஈரோடு வட்டத்திற்குட்பட்ட ஈரோடு கிழக்கு உள்வட்ட கிராமங்களுக்கான 3-ம் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இதில், ஈரோடு கிழக்கு உள்வட்டத்திற்குட்பட்ட பெரியசேமூர், நஞ்சை தளவாய்பாளையம், வைராபாளையம், பி.எஸ்.அக்ரஹாரம், பீளமேடு, வெண்டிபாளையம், சூரம்பட்டி, திண்டல், ஈரோடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 120 மனுக்களை பெற்றுக்கொண்டு, பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் மொத்தம் 198 மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து, ஜமாபந்தி தீர்வாயத்தில் ஈரோடு கிழக்கு உள்வட்டத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்கான வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு, ஈ-பதிவேடு, சிறப்பு பதிவேடு, நத்தம் அடங்கல் பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை சங்கிலி ஆகியவற்றையும் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையினையும், 21 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் ஆதரவற்ற விதவை உதவித்தொகையினையும், 22 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையினையும் மற்றும் 25 பயனாளிகளுக்கு நகல் மின்னணு குடும்ப அட்டையினையும் என மொத்தம் 78 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 96 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, அலுவலக மேலாளர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பரமணியம், வட்டாட்சியர்கள் ஜெயகுமார் (ஈரோடு வருவாய்), பரிமளாதேவி (சமூக பாதுகாப்பு) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu