பெருந்துறை அருகே சுதந்திர தின விழா கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

பெருந்துறை அருகே சுதந்திர தின விழா கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு
X

துடுப்பதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஈரோடு மாவட்ட  ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பங்கேற்று பேசினார்.

பெருந்துறை அருகே துடுப்பதி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பங்கேற்றார்.

துடுப்பதி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பங்கேற்றார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே துடுப்பதி ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:- கிராம சபை கூட்டமானது, ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா, குடியரசுதின விழா, மே தினம் மற்றும் காந்திஜெயந்தி ஆகிய நாட்களிலும் மற்றும் சிலமுக்கியமான தினங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் சுதந்திர தினமான (ஆகஸ்ட் 15) செவ்வாய்க்கிழமை இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

மேலும், ஊரகப்பகுதிகளில் மழைநீரினை சேமிப்பதனை முனைப்புடன் செயல்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட்டு மழைநீர் சேகரிப்பினை ஒருமக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும் அனைவரும், மரக்கன்றுகளை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அனைத்து குக்கிராமங்களிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்யவேண்டும். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் தெளிந்தநீர்த் தொட்டி, பயன்பாடற்ற பாபானைகள், குளிர்சாதன பெட்டி பின்புறம், பழைய டயர், தேங்காய் மட்டைகள், செடிகள் வளரும் தொட்டி ஆகியவற்றில் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். மேலும், புதிய கட்டுமான பணிகள் நடக்குமிடங்கள் மற்றும் இதர தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமலும், அவற்றை முறையாக அகற்றியும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணககளின் முன்னேற்றம் குறித்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியினை முழுமையாக தடை செய்தல், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களைபயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி இல்லாத கிராமங்களை உருவாக்குதல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன், அனைத்து பொது இடங்களும் குப்பையில்லாமலும், திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.


அனைத்து வீடுகளிலும் திடக்கழிவுகள் தரம் பிரிப்பதை உறுதி செய்தல், தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை மட்டுமே தூய்மை காவலர்கள் சேகரம் செய்தல் மற்றும் திடக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் வழி முறையை மேம்படுத்துதல் வேண்டும். அனைத்து சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளின் நிலைத்த மற்றும் நீடித்த செயல்பாட்டை உறுதி செய்வதோடு, கழிப்பறைவசதி, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் கிராம ஊராட்சி நிறைவுற்ற நிலையினை அடைந்திட தேவையான வசதிகளை கண்டறியும் நோக்கில் கிராம ஊராட்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம் மற்றும் அதற்கான திட்ட அறிக்கையினை தயாரிக்க வேண்டும். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கென ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தேவைகள் குறித்து திட்டங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும், அதே போன்று மகளிர் திட்டத்தின் சார்பில் பெண்களின் சுய முன்னேற்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதனை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் தமிழக அரசின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் தங்களின் ஊராட்சி சிறந்த ஊராட்சியாக திகழ்வதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


இன்றைய கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2023 முதல் 31.07.2023 முடிய) செலவின அறிக்கை குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல் குறித்தும், துாய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்தும், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும், ஜல்ஜீவன் இயக்கத்தில் பணிகள் குறித்த விவரத்தினை உறுதி செய்தல் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுக்கான பணிகள் குறித்து விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் வேலை அட்டைகள் வழங்கியதை உறுதி செய்தல் குறித்தும், துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் குறித்தும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்களையும் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்துப்பெட்டகத்தினையும் வழங்கினார்.


இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்திஜெயராஜ், இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன் (பொ), உதவி இயக்குநர் சூர்யா (ஊராட்சிகள்), செயற்பொறியாளர் (வேளாண்-பொறியியல்துறை) விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, துடுப்பதி ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா, பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ஜோதிபாக்கியம், பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் பூபதி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story