தற்கொலை முயற்சி இடமாக மாறி வரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இரு வேறு சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் அரசால் 2 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டவை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற அரசு ஊழியர் வாங்கி வைத்துக்கொண்டு ஒரிஜினல் பட்டாவை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து வெள்ளையம்மாள் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் பட்டாவை கேட்டு சென்ற போது வெள்ளையம்மாள், அவரது மகன் மற்றும் குடும்பத்தினரை முருகனும், அவரது தம்பி முனுசாமி என்பவரும் மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து இன்று வெள்ளையம்மாள் தனது மகனும் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்தார்.மண்ணெண்ணெய் கேனுடன் வருவதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணைய் கேனை தடுத்து கைப்பற்றியுள்ளனர் பத்து பேரையும் மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.
இதே போல் திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரத்தைச் சேர்ந்தவர் சகாயமேரி (54).இவரது கணவர் ஜேம்ஸ் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு லாரி டிரைவராக இருந்தவர் இறந்துவிட்டார். அவரது இறப்பு குறித்த இறப்பு சான்றிதழ் வழங்க கோரி சகாயமேரி மாநகராட்சி அலுவலகத்திற்கு பலமுறை மனு அளித்தும் இறப்புச் சான்றிதழ் கொடுக்காமல் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சகாயமேரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த அவர் திடீரென மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை அவர் மீது ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.