நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்போம் என ஓட்டுநர் சங்கங்கள் அறிவித்தனர்.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உரிமை கரங்கள், சிறகுகள் ஓட்டுநர் சங்கம், சி.ஐ.டி.யு, இண்டிபென்டன்ட் டாக்ஸி, எஸ் எம் மீட்டர் ஆட்டோ ஆகிய ஓட்டுநர் சங்கங்களில் இருந்து நாம் தமிழர் ஓட்டுநர் தொழிற்சங்க பேரவை கீழக்கரணை பாஸ்கர் தலைமையில், செங்கல்பட்டு நாம்தமிழர் கட்சி வேட்பாளர் அகஸ்த்தியா சஞ்சீவிநாதன் முன்னிலையில் 150க்கும் மேற்பட்டோர் அவருக்கு அதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு நகர பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தனர்.
பின்னர் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கூறியபோது: கடந்த காலங்களில் ஓட்டுநர்கள் சார்பில் எங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தியபோது ஆளும் கட்சியினர் எங்கள் மீது தடியடி நடத்தி வாழ்வாதாரத்தை சீரழித்தனர். தற்போது ஓட்டுநர் சமுதாயத்தைச் சேர்ந்த அகஸ்த்தியா சஞ்சீவிநாதனை வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது நீண்டநாள் கோரிக்கைகளை அவரிடம் வைத்து தமிழகத்தில் உள்ள ஏராளமான ஓட்டுநர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.