மது குடிக்க பணம் தராத மனைவிக்கு கத்திக்குத்து
செங்கல்பட்டில் மது குடிக்க பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு பவானி நகரைச் சேர்ந்தவர் சுமதி (44). செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் அகிலன் வெளிநாட்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு வேலை ஒப்பந்தம் முடிந்து தனது சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு வந்துள்ளார்.இந்நிலையில் அகிலனுக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பதாகவும் இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனால் பவானி நகரில் இருந்து அண்ணா நகர் 4வது குறுக்கு தெருவிற்கு சுமதி மற்றும் அவரது மகன் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் தொடர்ந்து மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அகிலன் தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் சுமதியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . மேலும் இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.