கண்மாயில் குளிக்க சென்ற மூன்று பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் அருகே கல்குவாரியில் குளிக்கச்சென்ற சென்னையை சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் தமீம்அன்சாரி (25). இவரது மனைவி சமித்தா. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் செங்கல்பட்டு புலிப்பாக்கம் அருகே உள்ள காந்தலூர் பகுதியில் தங்களது உறவினர் வீட்டிற்கு பொங்கல் விடுமுறையை கழிக்க கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்துள்ளனர்.இந்நிலையில் காந்தலூர் பகுதியில் உள்ள கல்குவாரி மலைப்பள்ளத்தில் குளிக்க நேற்று மதியம் சென்றுள்ளனர். ஆனால் நேற்று மாலை வரை இவர்கள் மூவரும் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவலுறையினர் மூவரும் குளிக்கச்சென்ற அந்த கல்குவாரி மலைப்பள்ளத்தில் சோதனையிட்டு வந்தனர்.
இன்று மதியம் 3 மணியளவில் காந்தலூர் கல்குவாரி மலைப்பள்ளத்தில் பெண் உள்பட மூன்று பேரின் உடல்கள் மிதப்பதாக தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.