நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
அரியலூர் நகராட்சியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
HIGHLIGHTS
அரியலூர் நகராட்சியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் 2020-21ன் கீழ் ஜெயங்கொண்டம் சாலை கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் பேரூராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 09.08.2010 முதல் செயல்பட்டு வருகிறது.
அரியலூர் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.104.00 லட்சம் மதிப்பீட்டில் 5 வது வார்டில் உள்ள இருசுக்குட்டை நீர்நிலை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டு, பணிகள் விவரம் குறித்து கேட்டறிந்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, சிறுவர்கள் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவைகள் அமைத்திடவும், வரத்து வாய்கால் மற்றும் வடிகால் ஆகியவற்றை முறைப்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சாலை கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் ரூ.80.00 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். தற்பொழுது சுகாதார வளாகமானது வ.உ.சி தெரு சமுதாய கூடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. .
இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், நகர்மன்றத் துணைத்தலைவர் கலியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், புகழேந்தி, நகராட்சி ஆணையர் சித்ரசோனியா, வட்டாட்சியர் குமரைய்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.