அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட செயலாக்கக் குழுக்கூட்டம்
அரியலூர் மாவட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட செயலாக்கக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-க்கான திட்ட செயலாக்கக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-க்கான திட்ட செயலாக்கக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 2021-2022ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-க்கான திட்ட செயலாக்கக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ல் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாலாஜாநகரம், ரெட்டிப்பாளையம், கடுகூர், எருத்துகாரன்பட்டி, புங்கங்குழி, நாகமங்கலம், காவனூர், ஆலந்துறையார்கட்டளை ஆகிய 8 ஊராட்சிகள் மற்றும் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ல் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தா.பழூர், அம்பாபூர், பருக்கல், சிந்தாமணி, வேம்புக்குடி, மணகெதி ஆகிய 6 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்றத்தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பி.எல்.எப். உறுப்பினர்கள், எஸ்.பி.எம். ஊக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ன்கீழ் மேற்கண்ட ஊராட்சிகளில் குறைந்த பட்ச அடிப்படை நிதியாக தலா ரூ.30 இலட்சம் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வழங்கப்படும். மேலும், செயல்திறன் ஊக்க நிதியாக ரூ.5 இலட்சம் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வழங்கப்படும். இதனை தவிர 2 சதவீத நிதியானது நிர்வாக செலவுகள், தகவல், கல்வி, தொடர்பு, ஆவனப்படுத்துதல் மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவை சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும். மக்கள் தொகை மானியம், குக்கிராம மானியம் ஆகியவற்றை கணக்கிடும் பொழுது, குக்கிராம எண்;ணிக்கைக்கு 50 விழுக்காடும், மக்கள் தொகை எண்ணிக்கைக்கு 50 விழுக்காடும் நிதி வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் மேற்கண்ட ஊராட்சிகளில் நீர்நிலைகளில் புனரமைத்தல் பணிகளுக்கு 30 சதவீதம் நிதி ஒதுக்கீடும், குக்குகிராமங்களில் தெருக்கல், வீதிகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கு 25 சதவீதம் நிதி ஒதுக்கீடும், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல் பணிகளுக்கு 10 சதவீதம் நிதி ஒதுக்கீடும், பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொது பயன்பாடு கட்டமைப்புகளை உருவாக்குதல் பணிகளுக்கு 15 சதவீதம் நிதி ஒதுக்கீடும், பசுமை மற்றும் சுத்தமான கிராமப் பணிகளுக்கு 10 சதவீதம் நிதி ஒதுக்கீடும், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகளை ஒருங்கிணைத்தல் பணிகளுக்கு 10 சதவீதம் நிதி ஒதுக்கீடும் என அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ன்கீழ் மேற்கண்ட திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ன்கீழ் தேர்வு செய்யப்பட்ட சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அதற்கான கருத்துருக்கள் குறித்தும் விரைவில் தயார் செய்து, நிர்வாக அனுமதிக்காக விரைவாக அனுப்பிட சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் ராஜராஜன், தா.பழூர் ஒன்றியக்குழுத்தலைவர் .மகாலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.