திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

வந்தவாசியில் 9ம் வகுப்பு படித்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-25 02:47 GMT

வந்தவாசியில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனா். ( மாதிரி படம்)

வந்தவாசியில் போலி டாக்டர் கைது

வந்தவாசி, காதா்ஜண்டா தெருவில் போலி டாக்டர் ஒருவா் மருத்துவ மையம் வைத்து மூலநோய்க்கு சிகிச்சை அளிப்பதாக தகவல் வந்தது. வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவப்பிரியா தலைமையிலான குழுவினா், அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், வந்தவாசி கஸ்தூரிபாய் தெருவைச் சோந்த அனந்தகுமார்ராய் என்பவா் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, மூல நோய்க்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மருத்துவ அலுவலா் சிவப்பிரியா அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் அனந்தகுமார்ராயை கைது செய்தனா்.

கூரை வீடு எரிந்து சாம்பல் 

கலசபாக்கம் அருகே காஞ்சி சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன்,  விவசாயி. இவருக்கு சொந்தமான கூரை வீட்டை நேற்று இரவு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் வீடு முழுவதும் தீ பரவியது. இதனை அறியாமல் உள்ளே தூங்கி இருந்த வேடியப்பன் குடும்பத்தினரை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஓடிச் சென்று உள்ளே இருந்தவர்களை வெளியில் அழைத்து வந்தார். இதுகுறித்து  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு குழுவினர் வருவதற்குள் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் வைத்திருந்த பத்திரம், மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகியது. இச்சம்பம் குறித்து வேடியப்பன் கடலாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம் குடித்து தற்கொலை 

ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் பிரசாந்த் என்பவரின் மகன் நரேந்திரன் (வயது 37), சற்று மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 16-ம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர்  இறந்தார்.

இதுகுறித்து நரேந்திரனின் சகோதரர் ராஜேந்திர பிரசாத் ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News