திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

Update: 2024-04-18 00:40 GMT

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ராமர்

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் திருக்கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்  நடைபெற்றது.

இதையொட்டி மூலவா்களான ராமா், லட்சுமணன், சீதை, அனுமன் ஆகியோருக்கும், இராமானுஜா், கருடாழ்வாா் ஆகியோருக்கும் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பாகவத குழுவினா் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாடினா். ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள் உற்சவத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பெரணமல்லூர்

பெரணமல்லூர் அருகே ராமச்சந்திர பெருமாள் கோயிலில் நேற்று பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமச்சந்திர பெருமாள் கோயிலில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாதத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் பிரமோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி, சித்திரை பிரமோற்சவம் முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் ராமச்சந்திர பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.

பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு காலை 8.30 மணிக்குமேல் பட்டாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கத்துக்கு மத்தியில் பிரமோற்சவ கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் விழாவில் நாள்தோறும் இரவு அனுமந்த வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தவிர வருகிற 20 ம்தேதி மாலை 6 மணிக்குமேல் சுவாமி திருக்கல்யாண உற்வசமும், அன்று இரவு 11 மணிக்குமேல் கருடசேவையும், 22 ம்தேதி விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் உற்சவமும், 24 ம் தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரியும், அன்று இரவு கொடியிறக்கமும் சிறப்பாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News