திருவண்ணாமலை மாவட்ட குறை தீர்க்கும் கூட்டத்தில் நூதன போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் குடுகுடுப்பை காரர் வேடம் அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-01 06:58 GMT

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடுகுடுப்பைக்காரர் போன்று வேடம் அணிந்து மனு அளிக்க வந்தவர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 566 மனுக்கள் வரப்பெற்றன.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோா், மாணவா்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 566 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ)குமரன், ஆதிதிராவிடா் நல அலுவலா் சண்முகசுந்தரம், வருவாய் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி, மா.தனலட்சுமி (ஆரணி) மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

குடும்பத்தினருடன் வாலிபர் தர்ணா

தண்டராம்பட்டு தாலுகா எடத்தனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவி இந்து மற்றும் மகன், தந்தை, தாய், பாட்டி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், நாங்கள் வசித்து வரும் வீட்டின் பட்டா உறவினர் பெயரில் பதிவாகி உள்ளது. அவர் பட்டாவை வேறு ஒருவர் பெயரில் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார். தவறாக பதிவாகியுள்ள பட்டாவை ரத்து செய்து எங்கள் வீட்டை அவரிடம் இருந்து மீட்டு தரக்கோரி இதுவரை 16 முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார். இதையடுத்து அவர்களை போலீசார் கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர்.

நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலக வாயில் முன்பு விவசாயிகள் புருஷோத்தமன் தலைமையில் குடுகுடுப்பைக்காரர் போன்று வேடம் அணிந்து குறி சொல்லி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மாவட்ட வேளாண்மை துறையை கண்டித்தும்,  மாவட்டம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு நிலவுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.  லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குடுகுடுப்பை காட்டி ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என்று நூதன முறையில் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News