உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குனர் அதிரடி

உரக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 17 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-20 00:55 GMT

உரக் கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

https://www.instanews.city/tamil-nadu/tiruvannamalai/arani/agriculture-officials-inspect-fertilizer-shops-in-thiruvannamalai-district-1141275

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 17 உர விற்பனை நிலையங்களின் உரிமம் நிரந்தரமாகவும், 75 விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்துறை அறிவித்தது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) அ.பாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 206 சில்லறை உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 31 மொத்த உர விற்பனை நிலையங்கள் என மொத்தம் 237 உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, உரக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 75 உர விற்பனை நிலையங்களுக்கு உர விற்பனை செய்ய தற்காலிகத் தடையும், 17 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 92 உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, உர விற்பனையாளா்கள் மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவியைப் பயன்படுத்தி விவசாயிகளின் ஆதாா் எண் மூலமாகவே சாகுபடி பரப்புக்கு தகுந்தவாறு உரங்களைப் பரிந்துரை செய்து விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

தேவைக்கு அதிகமான உரங்களை பரிந்துரை செய்யக் கூடாது. விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தெரியவந்தால் உர விற்பனை உரிமம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News