திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்

Update: 2022-02-05 13:10 GMT

திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.எஸ்.சங்கீதா திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. மாநில தேர்தல் ஆணையத்தால் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பார்வையாளராக எம்.எஸ்.சங்கீதா நியமிக்கப்பட்டு உள்ளார். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.எஸ். சங்கீதா திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, வட்டார தேர்தல் பார்வையாளர் சந்திரா ஆகியோரிடம் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், தபால் வாக்கு, வாக்குச்சாவடி மையம் அமைப்பது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

மேலும் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன. பதற்றமானவை எத்தனை என்று கேட்டறிந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர், நகராட்சியில் 144 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், அதில் 20 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரிவித்தார்.

ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீபிரகாஷ், தேர்தல் உதவியாளர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News