தமிழக அரசின் பரிசு தொகை பெற எழுத்தாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தமிழக அரசின் பரிசு தொகை பெற எழுத்தாளர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

Update: 2021-09-07 07:44 GMT

தமிழக அரசின் பரிசு தொகையை பெற தகுதியான ஆதிதிராவிடர், ஆதிதிராவிட கிறிஸ்துவர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய பணிக்கான நிதியிலிருந்து சிறந்த ஆதிதிராவிடர், ஆதிதிராவிட கிறிஸ்துவர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த 20 எழுத்தாளர்கள் மற்றும் ஆதி திராவிடர் அல்லாத இருவர் என 22 எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு பரிசு வழங்குகிறது.

இதுதவிர எழுத்தாளர்கள் நூல் வெளியிட ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த பரிசுத்தொகை மற்றும் நிதி உதவி பெற தகுதியான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் தங்களது பெயர் முகவரி படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 20ஆம் தேதி ஆகும்.

விண்ணப்பங்களை ஆணையர் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News